(கி.நா): எழுத்தறிவித்த இறைவன் வாழ்த்து, பாடல் - ௪
கிறுக்கல் நானூறு - எழுத்தறிவித்த இறைவன் வாழ்த்து.
பாடல் - ௪
ஒன்றாம் வகுப்பில் அகரம் தொடங்கி, கல்வியை எனக்கு அறிவித்து எனது கற்றலை இனிமையாக்கியவர் திரு. பசுபதி ஐயா அவர்கள்.
புதுவை, குண்டுபாளையம், அரசு ஆரம்பப்பள்ளியில் சேர்ந்த அந்த முதல் நொடியும் என் மனதில் ஆழமாய் உள்ளது.
ஒருநாள் பலப்பம் எடுத்து வராத காரணத்தால், அவர் எனது முதுகில் வைத்த அடி தாங்காமல் அந்த இடத்திலேயே மூச்சா போய்விட்டதும் என் நினைவுக்கு வருகின்றது.
ஆனாலும் சோதனைகளை கடந்து அதனையே சாதனைகளாக்கி விடும்போது நாம் திரும்பிப் பார்க்கும் போது அந்த சோதனைகளும் நமக்கு சுகத்தையே கொடுக்கும் அல்லவா?
பசுபதி ஐயா அவர்களின் துனைவியாரும் ஆசிரியப் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவரே...
இந்த கவிதையை என் முதல் வகுப்பு ஆசிரியருக்கு அர்ப்பணிக்கிறேன்.
எழுத்தறி வித்தவர் தெய்வமே யாவர்
விழுத்துணை யாகிடும் கல்வி ஒழுக்கம்
விசும்பு புகழ்நல் கல்விதெரி வித்த
பசுபதி ஐயனே வாழ்க!
அன்று அவர் காட்டிய அன்பும், அதைவிட கண்டிப்பும் அவர்மீது பயங்கலந்த மரியாதையையே கொடுக்கின்றது.
என்னதான் கல்லூரியில் விரிவுரையாளர்களுடன் சாதாரணமாய் பேசமுடிந்தாலும், இன்றும் பசுபதி ஐயாவை நேர்கொண்டு பார்த்து பேச ஒரு கூச்சம்.
இவர் தவிர குறிப்பிட்டு சொல்லக்கூடிய ஆசிரியர் பெருந்தகைகள் பலர் இருக்கின்றார்கள். பாதையில் அவர்களைச் சந்திப்போம்.
நன்றி,
நல்லவன்


0 கருத்துக்கள்:
Post a Comment
<< Home