Tuesday, January 31, 2006

கி.நா - ௬, மரங்கொத்தியே!மரங்கொத்தியே!

கிறுக்கல் நானூறு - மரங்கொத்தியே!மரங்கொத்தியே!
பாடல் - ௬

பலகை இசைத்த இசையினைப் போல்சேப்
பலகை யலகின்றி சுத்தமாய் - சிலமாம்
பலகை களில்கொத் துமேதனது கூர்ப்
பலகை மரங்கொத் தியாம்..


பொருள் விளக்கம்:
பலகை = பல + கை
சேப்பலகை = செம்மை + அலகை (அலகு = இசை சுரத்தின் அளவு)
அலகின்றி = குற்றம் இன்றி

நன்றி,
நல்லவன்.

Monday, January 23, 2006

(கி.நா): வணக்கம்,வணக்கம்! பாடல் -௫

கிறுக்கல் நானூறு - அவையடக்கம் - பாடல் -௫

வலைப்பூ அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.
பல வகையான தகவல்களை, தனக்கே உரிய தனிச் சுவையுடன் கொடுத்துக்கொண்டிருக்கும் வலைப்பூவர்கள் அனைவருக்கும் நன்றி.

தான் எழுதும் கிறுக்கல்களுக்கு ஏதேனும்
ஒரு மேடை கிடைக்காதா என்று ஏங்கிக்
கொண்டிருந்த எனக்கு இந்த வலைப்பூ
உலகம் சொர்க்கமாய் தோன்றுகிறது.
அதனினும் மேலே அத்தனை பதிவையும்
அது தேனோ, குளவிக்கொட்டோ எதுவாயிருந்தாலும்
அதை திரட்டி அனைவரும் படிக்கும் வகையில்
செய்து தமிழுக்கு ஒரு வகையில் தொண்டாற்றி வரும் திரட்டிகளுக்கும் நன்றி.

தமிழ்மணம், தேன்கூட்டின் அன்பரும் கூட்டும்
அமிழ்தினுந் தேர்ந்த, வலைப்பூப் பதிவரின்
பூக்களதைக் கோர்த்து, கதம்பமாய் நல்கிடும்
நோக்கத்தைப் போற்றுதும் யாமே...



என்னைப் பற்றி சொல்லிக்கொள்ளும் அளவுக்கு ஒன்றுமில்லை.கவிதை மற்றும் ஆன்மிகம் போன்ற பதிவுகள் நிறைய வருகின்றன. முக்கியமாய் இது சார்ந்த விண்மீன் பதிவர்கள் நன்றாய் ஒளிர்கிறார்கள். வாசகர் பரிந்துரையைப் பார்த்தாலே இது விளங்குகிறது. (குமரன், ஞானவெட்டியான் அவர்களின் ஆன்மிகம் பரப்பும் தொண்டு பிரமிப்பூட்டுகிறது). தற்போதுதான் வலைப்பூ படிக்கத்தொடங்கியிருக்கிறேன்.
எனது கிறுக்கல்களையும் ஏற்று அல்லது பக்குவப்படுத்த ஆதரவு தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.


(பி.கு.. பேச்சுத்தமிழில் எழுதத்தான் ஆசை, ஆனால் என்ன பன்றது, மரபுக்கவிதை மேல ஆசைப்பட்டாச்சு... அதனால் உரைநடைத்தமிழில் எழுத முயற்சிக்கிறேன்.)

Monday, January 09, 2006

(கி.நா): எழுத்தறிவித்த இறைவன் வாழ்த்து, பாடல் - ௪

கிறுக்கல் நானூறு - எழுத்தறிவித்த இறைவன் வாழ்த்து.
பாடல் - ௪

ஒன்றாம் வகுப்பில் அகரம் தொடங்கி, கல்வியை எனக்கு அறிவித்து எனது கற்றலை இனிமையாக்கியவர் திரு. பசுபதி ஐயா அவர்கள்.

புதுவை, குண்டுபாளையம், அரசு ஆரம்பப்பள்ளியில் சேர்ந்த அந்த முதல் நொடியும் என் மனதில் ஆழமாய் உள்ளது.

ஒருநாள் பலப்பம் எடுத்து வராத காரணத்தால், அவர் எனது முதுகில் வைத்த அடி தாங்காமல் அந்த இடத்திலேயே மூச்சா போய்விட்டதும் என் நினைவுக்கு வருகின்றது.

ஆனாலும் சோதனைகளை கடந்து அதனையே சாதனைகளாக்கி விடும்போது நாம் திரும்பிப் பார்க்கும் போது அந்த சோதனைகளும் நமக்கு சுகத்தையே கொடுக்கும் அல்லவா?

பசுபதி ஐயா அவர்களின் துனைவியாரும் ஆசிரியப் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவரே...

இந்த கவிதையை என் முதல் வகுப்பு ஆசிரியருக்கு அர்ப்பணிக்கிறேன்.

எழுத்தறி வித்தவர் தெய்வமே யாவர்
விழுத்துணை யாகிடும் கல்வி ஒழுக்கம்
விசும்பு புகழ்நல் கல்விதெரி வித்த
பசுபதி ஐயனே வாழ்க!


அன்று அவர் காட்டிய அன்பும், அதைவிட கண்டிப்பும் அவர்மீது பயங்கலந்த மரியாதையையே கொடுக்கின்றது.

என்னதான் கல்லூரியில் விரிவுரையாளர்களுடன் சாதாரணமாய் பேசமுடிந்தாலும், இன்றும் பசுபதி ஐயாவை நேர்கொண்டு பார்த்து பேச ஒரு கூச்சம்.

இவர் தவிர குறிப்பிட்டு சொல்லக்கூடிய ஆசிரியர் பெருந்தகைகள் பலர் இருக்கின்றார்கள். பாதையில் அவர்களைச் சந்திப்போம்.


நன்றி,
நல்லவன்

Saturday, January 07, 2006

(கி.நா): வள்ளல் வாழ்த்து பாடல் - ௩

கிறுக்கல் நானூறு - வள்ளல் வாழ்த்து.
பாடல் - ௩

மரபுக் கவிதை என்றால் அதில் வள்ளல் வாழ்த்து இல்லாமல் முழுமையடையுமா?

சகமனிதர் இன்னல் கருதா கொடுங்கலி
யுகமதில் விளங்கவே கேகே நகர்வாழ்
கலையருள் லக்ஷ்மணன் வள்ளல் அவர்தம்
தலைமுறை ஏழும் வளர்க!


வழங்கு பெயர்களை தமிழ் மரபுக்கவிதையில் சேர்த்தமைக்கு அன்பர்கள் மன்னிக்கவும்.

சென்னையில் உள்ள, கலைஞர் கருனாநிதி நகர் என்றால் அனைவருக்கும் புரியுமா என்ற அச்சத்தாலும், ஊர் பெயரே நிறைய இடத்த ஆக்கிரமித்துக்கொள்ளும் என்ற எண்ணத்தினாலும் இந்த செய்கை....

வள்ளல் வாழ்த்தைப் பார்த்தவுடன் இது ஏதோ தனிமனிதர் வழிபாடு என்று எண்ணிவிட வேண்டாம்.

சிறு வயதிலேயே எனது தாயை இழந்து, 2000 ஆண்டில் நான் புதுவைப் பல்கலைக்கழகத்திலே M.C.A (1998-2001) படித்துக்கொண்டிருந்தபோது எனது தந்தையும் இறந்துவிட, படிப்பை தொடர்ந்து முடிக்கமுடியுமா என்ற சூழ்நிலை...

அப்போது, தானே முன்வந்து, மாதம் 1000 உரூபாய் கொடுத்து, படிப்பை முடிக்க உதவியாய் இருந்தது மட்டுமல்லாமல், எனக்கு வேலை கிடைக்கும் வரையிலும் கொடுத்துதவிய எனது நண்பனை நான் இங்கு குறிப்பிடாவிட்டால் வேறெங்கும் குறிப்பிட முடியாது என நினைக்கிறேன்.

எனது நண்பனைப் பார்த்து நிறைய நாளாயிற்று.இதை அவன் படிக்க
சந்தர்ப்பம் நேர்ந்தால் மகிழ்வேன்.புகழுரைகளை நேரில் சொல்லமுடியாதல்லவா...

(இன்று வரை, நான் அந்தப் பணத்தை திருப்பிக்கொடுக்கவில்லை, அவனும் கேட்டதில்லை, கொடுத்துவிட்டால் நன்றியிழை அறுந்துவிடுமோ?)

வாழ்த்த நினைத்தால், அன்னாரின் மின்னஞ்சலுக்கு lakshman.prasad@gmail.com அனுப்பலாம்.

(அவர் செய்த உதவிக்கு நான் , SPAM செய்ய வைப்பதுதானா நன்றிக்கடன்?. லக்ஷ்மணன் என்னை மன்னிக்க.., )


அன்பன்,
நல்லவன்

கிறுக்கல் நானூறு - மொழி வாழ்த்து. பாடல் - ௨

கிறுக்கல் நானூறு - மொழி வாழ்த்து.
பாடல் - ௨

இருளிலே வாழ்ந்த மனிதரைக் காக்க
மருளது போக்க, முருகனின் - திருவாய்
உழன்று தமிழரின் உள்ளுயிர் ஏகிய
அழகுத் தமிழே வளர்க!


நிச்சயம் உலகில் மக்கள் எந்தப் பகுதியில் வசித்தாலும் அவர்கள், மொழியின் பெயரைக் கொண்டே பெயர் சூட்டப்படுகிறார்கள்.

நானும் எனது தாய்மொழியை என்னுடைய அடையாளமாகக் கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.

அன்பன்,
நல்லவன்

கிறுக்கல் நானூறு - கடவுள் வாழ்த்து. -- ௧

கிறுக்கல் நானூறு - கடவுள் வாழ்த்து.
பாடல் - ௧

முன்னறி ரானி யவரன்பு ஆதிமூலம்
நன்னெறி கூறிய தெய்வமே - நன்வளர்
பெற்றோர் எனமகிழ் மக்கள் கடவுளர்
நற்றாள் தொழுதெழு வாம்.

அப்பா... நீண்ட நாட்களுக்குப் பிறகு ஆரம்பிக்க இறைவனின் சித்தம் போலும்.
இதோ கடவுள் வாழ்த்துடன் ஆரம்பம்.
இனிதே நிறைவேற்ற என் நினைவில் வாழும் பெற்றோர்களையும், அன்பர்களின் ஆதரவையும் வேண்டி நிற்கும்...

அன்பன்,
நல்லவன்.